Tamilnadu

பெற்ற மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்து அமைந்துள்ளது கீழ் அய்யம்பேட்டை. இங்கு செந்தில் குமார் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இளம் மகள் இருக்கும் நிலையில், இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த சூழலில் சிறுமி தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், செந்தில் குமார் தனது 16 வயதுடைய இளம் மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 2022-ம் ஆண்டு சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

தொடர்ந்து அவரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்கையில், தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி கண்ணீருடன் கதறி அழுது கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தந்தை செந்தில் குமார் மீது கடந்த ஆண்டு (2022) ஆரணி மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட செந்தில் குமாரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறியது.

மேலும் தனது மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செந்தில் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தண்டனை பெறப்பட்ட குற்றவாளி செந்தில் குமாரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட தந்தைக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Also Read: டெலிவரி பாய் வேடத்தில் கஞ்சா கடத்தல்.. மடக்கி பிடித்த போலிசார்.. பிரபல ரெளடி பீடி பாலா கைது !