Tamilnadu

திருமண நிகழ்விற்கு வந்த 6 வயது சிறுவன் திடீர் மாயம்.. 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போலிஸ்!

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த சித்தப்பா மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார்.

இதையடுத்து, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடிக்குடியிருப்பில் சுரேஷ் குமார் குடும்பத்தோடு அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இவரது 6 வயது மகன் பிரிவீன் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். உடனே அருகே இருந்த இடங்களில் சிறுவனைத் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.

பிறகு சுரேஷ்குமார் நொளம்பூர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கால் டாக்ஸியில் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கார் எண்ணை வைத்தும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும் சிறுவனைப் பற்றிய தகவலை வாட்சப் குழுக்களிலும் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த திருமண மண்டபத்தில் சிறுவன் ஒருவன் தனியாக இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளனர்.

உடனே அங்குச் சென்ற போலிஸார் சிறுவனிடம் விசாரித்தபோது சுரேஷ்குமாரின் மகன் என்பது உறுதியானது. பிறகு சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், திருமணத்திற்குத் தயாராக இருந்த சிறுவன் உறவினர் என நினைத்து வேறு ஒருவரின் காரில் ஏறி சென்றதும் தெரியவந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Also Read: "டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒரு போதும் இந்த அரசு விட்டுக்கொடுக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !