Tamilnadu

“கோர ரயில் விபத்து நடந்த மறுநாளே ஒடிசாவில் திருவிழா கொண்டாடிய ஆத்திக் கும்பல்” : சீறிய கி.வீரமணி !

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்து குறித்தும், அந்த விபத்துக்கான காரணம் குறித்தும் ஒன்றிய அரசு - இனியும் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நம் இதயங்களைக் கசக்கிப் பிழியும் அதிர்ச்சிச் செய்தி!

நெஞ்சை உலுக்கும் துயரமும், துன்பமும் அடையும் அண்மைக்கால ரயில் விபத்து, ஒடிசா மாநிலத்தில் 2.6.2023 அன்று நடைபெற்ற கோர, கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.

மூன்று ரயில்கள் ஒன்றின்மேல் ஒன்று மோதி - இதுவரை வந்த பலியானோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ கணக்குப்படி 275 என்றும், சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள் என்பதும் நம் இதயங்களைக் கசக்கிப் பிழியும் அதிர்ச்சிச் செய்தியாகும்.

முதலமைச்சரிடம் அறிக்கை நேரில் தாக்கல்

இச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வழமையாக சென்னையில் தமிழ்நாடு பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமோ, அவர்களை மீட்டு தமிழ்நாட்டுக் குடும்பத்தினருக்கு நிம்மதி உருவாக்கவேண்டுமே என்ற ஆழ்ந்த மனிதநேயக் கவலையிலும், கடமை உணர்விலும் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும், திரு.பணீந்திர ரெட்டி அவர்களுடன் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழுவினரை தாமதிக்காமல் விரைந்து அனுப்பினார்; வேகமான நிவாரணப் பணிகளிலும், ஆய்வுகளிலும் ஈடுபட்ட அந்தக் குழுவினர் நேற்று (4.6.2023) தமிழ்நாட்டிற்குத் திரும்பி முதலைமைச்சரிடம் அறிக்கையை நேரில் தாக்கல் செய்துள்ளனர்.

ஒடிசா முதலமைச்சரும், அவ்வரசும் புயல் வேகத்தில் பாதிக்கப்பட்டோர் - இறந்தோர் உடல்களை அடையாளம் காணவும், பாதிப்பிலிருந்து தப்பியவர்களுக்கு விமான வசதிகள், வேன் - பேருந்துமூலம் கொல்கத்தா மற்ற இடங்களுக்கு அனுப்பியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ முகாம் பணிகளையும் செய்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் வந்து ஆய்வு செய்து வருகிறார்; பிரதமர் மோடி அவர்களும் வந்து மருத்துவமனைக்குச் சென்று, மீண்டவர்களிடம் நலம் விசாரித்துள்ளார். மறைந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்! (ஏற்கெனவே (3.6.2023) இரங்கல் அறிக்கையும் கொடுத்துள்ளோம்).

ஒன்றிய அரசின் முக்கிய கடமையும், பொறுப்பும்!

இப்படிப்பட்ட அசாதாரண மிகப்பெரிய கோர விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் இதுபோன்று இனிமேல் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யவேண்டியது - ஒன்றிய அரசின் முக்கிய கடமையும், பொறுப்பும் ஆகும்!

அதேநேரத்தில், மக்களின் பாதுகாப்பினை பொதுநலக் கண்ணோட்டத்துடன் புரிந்து செயல்பட சில படிப்பினைகளையும் இந்த விபத்திலிருந்து ஒன்றிய அரசும், அதன் ரயில்வே துறையும் பெற்று, அவற்றிற்குரிய பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். சரியான - விபத்துப் பாதுகாப்புக் கருவிகள் - அதற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டும் சரிவர செய்யாதது ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுவதை ஒதுக்கிவிட முடியாது.

இரண்டு வகையாக ஆய்வு செய்யலாம்.

மனிதர்களின் தவறா? (Human Failure) அல்லது இயந்திரங்களின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறா? (Mechanical Failure) நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க இடமும், நேரமும் இல்லாமல் ஆக்கப்பட்டது சரிதானா? பிரதமர் மோடி அரசு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு) பதவியேற்றவுடன் தனியே ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கும் முறையையே ஒழித்துவிட்டு, அதனை பொது பட்ஜெட்டோடு - வரவு - செலவுத் திட்டத்தோடு இணைத்ததன்மூலம், ரயில்வேயில் பல வளர்ச்சித் திட்டங்கள், நிலுவைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாடு தழுவிய நிலையில் அமல்படுத்த - அவற்றின் தேவை, வளர்ச்சிபற்றி சரிவர புரிந்து விவாதிக்க இடமும், நேரமும் இல்லாமல் ஆக்கப்பட்டது சரிதானா?

நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர குடிமக்கள் - மலிவாக பயணம் செய்வது - ‘புலம்‘ பெயர் தொழிலாளர்கள் உள்பட பயணிப்பது ரயில்களில்தான். அதனை மனதிற்கொண்டு, பாதுகாப்பு அம்சங்களுக்கு தனி முக்கியத்துவத்தினை, முன்னுரிமையைக் கொள்ளவேண்டாமா?

‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோல்!’

பிரதமர் மோடி அவர்களால் பல பகுதிகளில் ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தொடங்கி வைக்கப்படுவதுகூட ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோல்’ உள்ளது என்ற கருத்துப் பரவலாக உள்ளது; அதனை எளிதில் மறுத்துவிட முடியாது!

அடிக்கடி ரயில்வே அமைச்சர்களை மாற்றுவதன்மூலம் அப்பிரச்சினையின் ஆழம் அகலம்பற்றி அமைச்சர்கள் புரிந்துகொள்வதற்கே உரிய கால அவகாசம் ஏற்படாமல், வெறும் அதிகாரிகளின் கருத்தை அவர்கள் பல நேரங்களில் ஏற்கும் நிலையும் உருவாகிவிடுகின்றது.

லாலுபிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலம் - ‘ரயில்வேயின் பொற்காலம்!’’

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் (பீகார்) லாலுபிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலம் ‘‘ரயில்வேயின் பொற்காலம்‘’ எனக் கருதப்பட்ட அளவில், அவர் ரயில்வேயில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பயணக் கட்டணங்களை உயர்த்தாது, சரக்கு ரயில் கட்டணங்களைக்கூட அதிகரிக்காது, பல புதுப்புது ரயில் தடங்களில் ரயில்களை விட்டு, ஏராளமான லாபத்தைப் பெற்று, பொது பட்ஜெட்டுக்கு நிதி உதவினார்!

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினர், அதற்காகவே அவரை அழைத்து, ‘‘எப்படி மற்றவர்களால் சாதிக்க முடியாத நிலையில், உங்களால் சாதிக்க முடிகிறது என்பதை எங்களுக்கு விளக்குங்கள்’’ என்று கேட்டு, பெருமைப்படுத்தியதை மறந்து, அவரையும், அவர் குடும்பத்தினரையும் வழக்குகளில் சிக்க வைத்தது ‘‘அரசியல்’’ அல்லாது வேறு என்ன?

நல்வாய்ப்பாக தமிழ்நாட்டுப் பயணியர்கள் எவரும் - இதுவரை வந்த செய்திகள்படி - விபத்தில் பலியாகவில்லை என்றாலும், ஆறு பேர்பற்றி ஒரு தகவலும் இல்லை என்பது கவலைக்குரியது! எந்த மாநிலத்தவராயினும் அவர்களது உயிரும் மனித உயிர்கள்தானே! அவ்வகையில் நாம் உணர்ந்ததால், இயல்பான உணர்வுப்படி அப்படி உணர்வதைக் கூறுகிறோம்.

மனிதநேயமிக்கது ‘திராவிட மாடல்’ அரசு!

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரின் வேகமும், விவேகமும் எடுத்துக்காட்டானவை! அதற்காக ஒரு நாள் துக்கம்; கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கம் என்ற சரித்திர நிகழ்வையே தள்ளி வைத்து, மனிதநேயமிக்கது ‘திராவிட மாடல்’ அரசு என்பதை மன்பதைக்கு உணர்த்தியுள்ளார் நமது முதலமைச்சர்.

இந்த நிலையிலும் நேற்று (4.6.2023) ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோவில் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அபிஷேக நிலை. ‘கருணைமிக்க’ பூரி ஜெகநாதர் விழாக் கொண்டாட்டம் நிறுத்தப்படவில்லை. தந்தை பெரியார் கூற்று ‘‘கடவுளை மற - மனிதனை நினை’’ என்பதுதான் விபத்தில் சிக்கிய எஞ்சியவர்களைக் காப்பாற்றியுள்ளது! கடவுள் பக்தர்கள் படிப்பினை பெறவேண்டாமா - கடவுளின் கருணை எப்படிப்பட்டது என்பதை? ஆத்திரப்படாமல் அறிவுடன் பக்தர்கள் சிந்திப்பார்களாக!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”உலகளவில் நான் எதிர்கொள்ள பயந்த ஒரே பந்துவீச்சாளர் இவர்தான்” -தமிழரை பாராட்டிய வீரேந்திர சேவாக் !