Tamilnadu

மகிழ்ச்சியாக ஏரியில் குளித்த 7 நண்பர்கள்.. 2 சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்: பதறியடித்து ஓடிவந்த கிராமம்!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல், தினேஷ்குமார், பிரசன்னா உட்பட 7 சிறுவர்கள் இன்று வயலூர் ஏரியில் குளிக்கச் சென்றனர். இவர்கள் 7 பேரும் நண்பர்கள்.

பின்னர் ஏரிக்குச் சென்ற நண்பர்கள் மகிழ்ச்சியாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெற்றிவேல், தினேஷ்குமார் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏரியின் ஆழமான பகுதியில் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே ஏரியின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த கிராம மக்கள் ஏரியில் இறங்கி சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

பின்னர் இருவரையும் கரைக்குக் கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர். ஆனால் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சிறுவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி இரண்டு நண்பர்கள் கண்முன்னே சக நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நிலத்தகராறு.. பெற்றோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர மகன்: உ.பியில் பகீர்!