Tamilnadu

“மோடியின் பூதக்கண்ணாடி.. ஒன்றிய அரசின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது..” : பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சு !

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட லூப் சாலையில் உள்ள டும்மிங் குப்பத்தில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பல்வேறு மருத்துவ சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. குடிசை பகுதிகளை மையமாக வைத்து சென்னையில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வாரமும் பிரதான குடிசைப்பகுதியில் நடைபெறுகிறது.

அந்தவகையில் இன்று டுமிங் குப்பம், நொச்சி குப்பம், நொச்சி நகர் பகுதி வாழ் மக்களுக்கு சென்னை நகரின் பிரதான அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து முகாம் நடைபெறுகிறது. இங்கு தொழுநோய், காச நோய், மகளிர் மருத்துவம், எலும்பியல், கண் மருத்துவம் என பல்வேறு துறைச்சார்ந்த 40 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர் மேலும் மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.

மேலும்,1200மேற்பட்ட குடும்பங்கள் இதற்கு முந்தைய முகாம்களில் பயன் பெற்றுள்ளனர் இம்முகாமிலும் இதுவரை 20 பேர் காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆணையங்களை அனுப்பி பூதக்கண்ணாடி வைத்து மாநில அரசுகளை குற்றம் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பது நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Also Read: ’லீ குவான் யூக்கு சிலை’.. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: முரசொலி!