Tamilnadu

இன்றே கடைசி நாள்.. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அப்டேட் இதோ!

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய முடிவுகள் மே. 8ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு 17ம் தேதி வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 பேர் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மேலும் பி.காம் படிப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6200 மாணவர்களும், ராணிமேரி கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4500 மாணவிகளும், பிகாம் சிஏ படிப்பில் சேர்வதற்கு கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3400 பேரும், வியாசர்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிகாம் படிப்பில் சேர்வதற்கு 70 இடங்களுக்கு 3478 பேரும், பாரதி பெண்கள் கல்லூரியில் உள்ள 140 இடங்களுக்கு 3421 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வது முதல் சேர்க்கை பெறுவது வரையிலும் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டப் பின்னர், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான குழுவை அமைத்து , தரவரிசைப்படி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Also Read: +2 தேர்வில் வரலாற்று சாதனை.. 600/600 மதிப்பெண் பெற்ற கூலி தொழிலாளியின் மகள்.. குவியும் பாராட்டுகள் !