Tamilnadu

முகநூல் பழக்கம்: மூதாட்டியின் Photoவை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த குமரி இளைஞர் -கைது செய்த போலிஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் (30). மெக்கானிக்கல் இஞ்சினீரிங் முடித்த இவர், தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர் சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். அதன்மூலம் நேரம் போகவில்லை என்று பலரிடமும் பேசி வந்துள்ளார்.

இந்த சூழலில் முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அறிமுகமாகியுள்ளார். 60 வயது மூதாட்டியான இவர் இந்த இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் சாதாரணமாக பேசி வந்த சூழலில், பாட்டியின் புகைப்படத்தை இளைஞர் கேட்கவே, அவரும் அனுப்பியுள்ளார்.

மேலும் போன் எண்ணையும் வாங்கி பேசியுள்ளார். அப்போது அருள், அந்த மூதாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுக்கவே, தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார் அருள். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்து, உடனே என்ன சொன்னாலும் செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர் மூதாட்டியிடம் பணம் கேட்கவே, GPay மூலம் முதலில் ரூ.12 ஆயிரம் அனுப்பியுள்ளார். பின்னர் அவரது பயத்தை இளைஞர் தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய நிலையில், மீண்டும் அவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மூதாட்டியோ, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூற, உடனே இளைஞரும் அந்த போட்டோக்களை வைத்து கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தார் என்ன என்று விசாரிக்க, உடனே நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் அவர்கள் பெங்களூரூ புத்தூர் காவல் நிலையத்தில் இந்த இளைஞர் மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் அருளை தேடி கன்னியாகுமரி விரைந்தனர்.

குமரியில் இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் பகுதிக்கு சென்று இளைஞர் அருளை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் உள்ள நார்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுருத்தியுள்ளனர்.

Also Read: PUBG விளையாட்டுக்கு மீண்டும் அனுமதி?.. வெளிவந்தது ஒன்றிய அரசின் நாடகம்!