Tamilnadu

“கேஸ் காலி.. தோசை கிடையாது..” - மனைவியை கொடூரமாக கொன்ற 60 வயது முதியவர்.. சம்பவத்தின் முழு பின்னணி என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் என்ற கிராமம். இங்கு கணேசன் என்ற 60 வயது முதியவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் இவர், தனது மனைவி மாதம்மாள் (50), மற்றும் மருமகள், 2 வயது பேரக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இரவு கணேசன் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது உறங்க பசியில் இருந்த கணேசன், தனது மனைவி மாதம்மாளிடம் தோசை சுட்ட தரும்படி கூறியுள்ளார். எனவே அவரும் சுட்டு கொடுத்துள்ளார். முதல் 3 தோசை சுட்டு கொடுத்த மனைவி, 4-வது தோசை சுட்டுக்கொண்டிருக்கும்போதே கேஸ் காலியாகியுள்ளது.

இதனால் கேஸ் காலி என்று கணவரிடம் கூறியுள்ளார். இதில் எரிச்சலைடைந்த கணேசன், தனக்கு மேலும் 3 தோசை வேண்டும் என்று கேட்கவே, அவர் இல்லை என்று மறுத்துள்ளார். அதோடு விறகு அடுப்பி வைத்து சுட்டுக்கொடுக்கும்படியும் கூறியுள்ளார். அதற்கு மனைவி மாதம்மாள் தனக்கு களைப்பாக உள்ளதாகவும், அதனால் முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் தனது அருகில் இருந்த கத்தியை கொண்டு மனைவியின் தலையிலும், கைகளிலும் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த மருமகள் மற்றும் 2 வயது பேத்தியையும் கணேசன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அனைவரும் கத்தி கூச்சலிடவே அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

அப்போது அனைவரும் இரத்த காயங்களுடன் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அனைவர்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி 60 வயதுடைய கணேசனை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மனைவி மாதம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதனை அதிகாரிகள் கொலை வழக்காக மாற்றி அவரை சிறையில் அடைத்தனர். தற்போது 2 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தோசை சுட்டு தரவில்லை என்ற ஆத்திரத்தில் 60 வயது கணவர், 50 வயது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, தடுக்க வந்த மருமகள், 2 வயது குழந்தையையும் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கூடி நின்ற கூட்டத்தில் காணாமல் போன சிறுமி.. தேடி கண்டுபிடித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி !