Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு பணிந்த ஒன்றிய அரசு.. தமிழிலும் CRPF தேர்வு!
ஒன்றிய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 9212 பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளது. இதில் CRPF உள்ளிட்ட 7 ஒன்றிய படைத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. CRPF தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதேபோன்று தி.மு.க இளைஞர் மற்றும் மாணவர் அணிகள் சார்பில் ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், CRPF தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.
தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் CRPF தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அசாம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் மத்திய படை தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி 1, 2024ம் ஆண்டு முதல் 13 மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் மாநில மொழிகளில் முதல் முறையாக CRPF தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!