Tamilnadu

“CRPFல் தமிழர்களுக்கு இடமில்லையா?.. 17ம் தேதி போராட்டம்” : களத்தில் இறங்கும் தி.மு.க இளைஞர், மாணவர் அணி !

சி.ஆர்.பி.எப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பில்லையா? இந்தி மொழி பேசுபவர்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிராகவும் உள்ள சி.ஆர்.பி.எப். பணிக்கான தேர்வில் சமவாய்ப்பு ஏற்படுத்துக என கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியதை ஒன்றிய பா.ஜ.க. அரசே உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் இந்தி பேசாத மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் மாற்ற நினைக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்தும் தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்வில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பினை மறுக்கப்படுவதை உணர்ந்த கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. நமது அரசமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், மேற்கூறிய பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிப்பது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்பு காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு கட்டக்கூடியதும் ஆகும்.

ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது, இத்தேர்வை எழுத விரும்பும் இந்தி அறியாத இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டு, ஒன்றிய உள்துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும், சி.ஆர்.பி.எப்.-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.”

இப்பணியில் சேருபவர்களின் தகுதியென்பது, நல்ல உடல் வலிமை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம் ஆகியவையே அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் எனும் போது, இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக இதனை கட்டமைக்க முயற்சிக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். அதற்கு மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்.

இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணித்தே தீருவேன் என்றும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் இந்தியை மட்டுமே கட்டாயமாக்குவேன் என்றும், இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் கருதப்படும் என்றும் பாசிச பா.ஜ.க. அரசு சர்வாதிகார தன்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பது தான் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே முழக்கமாகும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என்று பாசிச, சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிகிறது.

கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நடைபெறவுள்ள சி.ஆர்.பி.எப். தேர்வில் இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்கிட, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், வரும் 17.04.2023 அன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம், “சாஸ்திரி பவன்” அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘கேள்வி கேட்டா பதில் தெரியாது.. முட்டை மார்க் உனக்கு’: அண்ணாமலை Pressmeet - நக்கலடித்த எஸ்.வி.சேகர் !