Tamilnadu

12 மீனவர்கள் 109 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

5-4-2023 அன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 1-4-2023 அன்று 12 மீனவர்களுடன் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள்) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 5-4-2023 அன்று அதிகாலை 1-00 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 4 மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்குச் சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.கஸ்டாலின், தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய போக்கினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்திடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை அரசின் வசமுள்ள 12 மீனவர்களையும், 109 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: 10000 தொழில் முனைவோர்களுக்கு வணிக பயிற்சிகள்: அசத்தலான 43 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்