Tamilnadu

வறுமையில் குடும்பம்.. Insta Trading விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்த மாணவி: விபரீத முடிவால் நேர்ந்த சோகம்!

சென்னை 7 கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெரு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கணவரைப் பிரிந்து ஜோசப் என்பருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி அண்ணா அதர்ஸ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார்.

இந்த சூழலில் சாந்தி கடந்த 15 வருடமாக amway products விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனால் தாய்க்கு உதவ நினைத்துள்ளார் மகாலட்சுமி. அந்த சமயத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.

அதனை நம்பிய இவர், ஆன்லைன் டிரேடிங் செய்வதற்காக முயற்சி செய்துள்ளார். அது மோசடி இணையதளம் என்று தெரியாமல் ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் தாயின் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் அதில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காததால் மாணவி மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தை இப்படி நம்பி ஏமாந்து விட்டோமே, தாய்க்கு என்ன கூறுவது என்று யோசித்து யோசித்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு முழுவதும் பணத்தை இழந்த அதிர்ச்சியில் தூங்காமல் இருந்த கல்லூரி மாணவியை பெற்றோர்கள் தூங்கச் சொல்லி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மகாலட்சுமி எழுந்திருக்கவில்லை. இதனால் அவரது தாய் அவரை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் நடுப்புறம் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகாலட்சுமி இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியேயடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினரை அழைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவி மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவரது செல்போன் உள்ளிட்ட உடமைகளை கைப்பற்றினர். அப்போதுதான் அவர் ஆன்லைன் டிரேடிங்கில் 30 ஆயிரம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

மேலும் இது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து முத்தையால் பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு ஆன்லைன் டிரேடிங் பணம் இழந்தது தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்க்கு உதவ வேண்டும் என்று நினைத்த கல்லூரி மாணவி ஆன்லைன் மூலம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

Also Read: ஓடும் ரயிலில் பயங்கரம்.. பயணிகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்.. குழந்தை உட்பட 3 பேர் பலி.. கேரளாவில் சோகம்!