Tamilnadu

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘இலக்கிய திருவிழா’ : படைப்பாற்றலை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு திட்டம்!

அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் படைப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் "சிறார் இலக்கிய திருவிழா - 2023" துவக்க விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உட்பட பல்வேறு வகைப் போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் அடிப்படையில், மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவரகள் சிறார் இலக்கிய திருவிழா இன்று துவங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெரும் மாநில அளவிலான பயிலரங்கத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த பயிலரங்கத்தில் தமிழ் மொழியின் அடையாளமாக விளங்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கதைசொல்லிகள், ஊடகவியலாளர்கள் என ஏராளமான துறையை சார்ந்தோர், மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் உரையாடி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். மொழிவளம், உரைநடை, கட்டுரை, கதை, பேச்சு போன்ற பிரிவுகளில் முழுமையான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”பெரியோர்கள் மட்டுமே பங்குபெறும் இலக்கிய திருவிழாக்களில் மாணவர்களுக்கென்று ஒரு தனி இலக்கிய திருவிழாவை துவக்கி அவர்களை பங்கு பெற செய்ய வேண்டும் என்ற நெடுநாள் ஏக்கம் இன்று தீர்ந்தது. 40 வருடங்களுக்கு முன்பாக குழந்தைகளுக்கான 50 இதழ்கள் வெளிவந்தாக கூறுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பல்வேறு விதமான படைப்பாற்றல் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதற்கு யாரும் முன் வருவதில்லை. சிறார்களின் இலக்கிய திறமைகளை வெளிப்படுத்தும் இதழ்கள் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. பல்வேறு குழந்தைகளின் திறமைககளுக்கு முக்கியத்துவம் அளிக்க யாரும் முன்வராத நிலையில், முதலமைச்சர் தாமாக முன்வந்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த இலக்கிய திருவிழாவை செயல்படுத்து வருகிறார்.

குழந்தைகளின் படைப்பாற்றலை மற்றவருக்கு தெரியப்படுத்தும் விதமாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டது தான் தேன் சிட்டு ஊஞ்சல் என்ற இதழ்கள். ஏறக்குறைய 70 ஆயிரம் பிரதிகள் மாதத்திற்கு வெளிவருகிறது. மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனுக்கு வெற்றி தராது ஒரு ஒரு மாணவர்களின் தனித்திறமைகள்தான் அவர்களை முன்னுக்குக் கொண்டு வரும் என்று நாம்புபவர் முதல்வர்.

அந்தவகையில், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான அடித்தளம்தான் இந்த சிறார் இலக்கிய திருவிழா. பைலரங்கத்தில் பல்வேறு வகையான இலக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. சிறார் இலக்கியத் திருவிழாவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

எதிர்காலத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எழுத்தாளராகவோ, படைப்பாளியாகவோ இலக்கியவாதிகளாவோ வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனத் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Also Read: யார் யாருக்கு மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்? : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன பட்டியல் !