Tamilnadu

பல்க் SMS அனுப்பி பல லட்சம் கொள்ளை : தீரன் பட பணியில் மோசடி கும்பலை மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ் !

சென்னை மேற்கு மாம்பழத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கின்ற நிறுவனத்தில் இருந்து தனக்கு லோன் தருவதாக வந்த குறுஞ்செய்தி வந்தது.

இதனை நம்பி மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த 2,43,650 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்திருந்தார்.

அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆள்மாறாட்டம், மோசடி, இணைய வழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டெல்லியில் இருந்து மோசடி கும்பல் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலிஸார் டெல்லி விரைந்து சென்று, ரகுபீர் நகரில் தங்கி இருந்து பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேரை கைது செய்தனர்.

அதில், டெல்லி ராஜூரி கார்டன் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (29), புதுடெல்லி பாகத் நகர் பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் (24), புதுடெல்லி கிருஷ்ணன் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய 3 பேரையும் கடந்த 20 ஆம் தேதி அன்று டெல்லியில் வைத்து தமிழ்நாடு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து மோசடி செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், காசோலை புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் 1,50,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று டெல்லியில் இருந்து கைது செய்து சென்னை அழைத்து வந்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் டெல்லியில் தங்கி இருந்து கொண்டு குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கின்ற நிறுவனத்தின் பெயரில் லோன் தருவதாக பல்க எஸ்.எம்.எஸ் அனுப்பி அவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களை ஆசை வார்த்தைகள் காட்டி நம்ப வைத்து பல்வேறு காரணங்கள் கூறி, பணம் பெற்று பின்பு கட்டச் சொல்லி மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே குறுஞ்செய்திகள் மூலம் வரும் தகவல்களை உண்மை என நம்பி மக்கள் தங்களது பணத்தை யாருக்கும் அனுப்பக்கூடாது. நேரில் பார்க்காமலும், விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி ஏமாறக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விழிப்புணர்வுடன் செயல்படும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

Also Read: பொதுமக்களிடம் ரூ.2438 கோடி சுருட்டிய ஆருத்ரா நிறுவனம் : மோசடி வழக்கில் பா.ஜ.க மாநில நிர்வாகி ஹரிஷ் கைது!