Tamilnadu

திருமணங்களை மறைத்து 4-வது திருமணம்.. உடந்தையாக இருந்த 3-வது மனைவி ? வரதட்சனை கொடுமையால் வெளிவந்த உண்மை !

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வினோத் ராஜ்குமார். 45 வயதாகும் இவர் சென்னையில் பொறியாளராக இருந்து வருகிறார். தந்தை, தங்கைகள் உள்ளிட்டோருடன் வாழ்த்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது.

ஆனால் அவர் திருமணம் செய்த பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்படவே இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இவருக்கு திருமண தகவல் மையம் தொடர்பாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர் குடும்பத்தினர். அப்போதும் இவர்களுக்குள் தகராறு ஏற்படவே பிரிந்தனர். பிறகு மீண்டும் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த பெண்ணும் இவரை விட்டு பிரிந்துவிட்டார்.

இப்படியே தொடர்ச்சியாக 3 முறை இவருக்கு திருமணமாகி அந்த பெண்களை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நான்காவதாக மீண்டும் திருமணம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அவரது குடும்பத்தார் திருமண தகவல் மையம் மூலம் பெண்ணை பார்த்துள்ளனர். அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த நிலையில், இருவரும் பேசி திருமணம் செய்ய சம்மதித்துள்ளனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வினோத்துக்கு 4-வதாக இந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர் இருவரும் சில மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் வினோத்துக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே சிறு சிறு தகராறு இருந்து வந்துள்ளது. வினோத் வரதட்சணை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஒரு முறை திடீரென தனது மனைவியிடம் சொல்லாமல், அவரது ஊருக்கு சென்றுள்ளார் வினோத். சில நாட்கள் காத்திருந்த நிலையில், திரும்பி வராத கணவரை கூட்டி வர திருவள்ளூர் சென்றுள்ளார் அந்த பெண். அங்கே சென்றதும்தான் இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து பிரிந்தது தெரிந்தது இதனை மறைத்து இந்த பெண்ணை 4-வதாக திருமணம் செய்துள்ளதை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியுற்றார் அந்த பெண்.

இதையடுத்து தூத்துக்குடிக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தலைமைறைவாக இருந்த வினோத்தையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வினோத்தையும், அவரது குடும்பத்தாரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில் பணத்துக்காக இப்படி செய்ததாகவும், இந்த 4-வது திருமணத்தில் தனது 3-வது மனைவிக்கும் பங்கு உள்ளது என்றும் வினோத் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “கைது செய்தால் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள்”: நகையை கொள்ளையடித்த ரீல்ஸ் பிரபலம் -போலிசில் சிக்கியது எப்படி?