Tamilnadu

தந்தையில் சடலத்தின் முன் நடைபெற்ற மகனின் திருமணம்.. கடைசி ஆசையை நிறைவேற்ற ஒன்று திரண்ட கிராமமக்கள் !

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). இவரின் மனைவி அய்யம்மாள் என்பவர் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் பிரவீன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பிரவீனுக்கும் உறவினரான சொர்ணமால்யா என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து இருவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் வரும் 27 ஆம் தேதி திருமணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதற்கான பத்திரிகையும் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரவீனின் தந்தை ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனால் அங்கு ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணம் நடைபெற இன்னும் 5 நாட்களே இருந்த நிலையில், தந்தை உயிரிழந்தது அந்த குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மகனின் திருமணத்தை பார்க்கவேண்டும் என்பதுதான் தந்தையின் கடைசி ஆசையாக இருந்த நிலையில், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரின் சடலத்தின் முன் திருமணம் செய்ய பிரவீன் முடிவெடுத்து தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

அவர்கள் இதற்கு சம்மதித்த நிலையில், மணப்பெண் மற்றும் அவரின் வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சூழ தந்தையின் சடலத்தின் முன் பிரவீனின் திருமணம் நடைபெற்றது. அப்போது தந்தையின் கையில் அட்சதையை கொடுத்து அவரது கையால் மற்றவர்கள் தூக்கிபிடித்து தூவ வைத்தனர். இதன் பின்னர் அங்கிருந்து ராஜேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலகின் மதிப்புமிக்க வீரரான கைலியன் எம்பாப்பேயை கேப்டனாக அறிவித்தது பிரான்ஸ்.. 24 வயதில் கிடைத்த கெளரவம் !