Tamilnadu

தனியார் குழந்தைகள் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு : நிறுவனரை போக்சோவில் கைது செய்து போலிஸ் அதிரடி!

நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை காரைக்கால் ஓ.என்.ஜி.சி உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

இந்த காப்பகத்தில் பொருளாதரத்தில் நலிவுற்ற, தாய், தந்தை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட 15 பெண் குழந்தைகள், 15 ஆண் குழந்தைகள் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த காப்பகத்தில் தங்கி 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி காப்பகத்தின் நிறுவனர் பரமேஸ்வரன் தன்னிடமும், காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும், தனி அறைக்கு அழைத்து சென்று, பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டதாகவும், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த காப்பக நிறுவனர் பரமேஸ்வரன் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த தனது வீட்டில் இருந்து குடும்பத்துடன் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், துணை ஆட்சியர் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பரமேஸ்வரன் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் குழந்தைகளை அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். அதேவேளையில் சோதனை மேற்கொண்டு காப்பகத்தை இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து தலைமறைவான பரமேஸ்வனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், நாகை அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பரமேஸ்வரனை தனிப்படை போலிஸார் கைது செய்து, நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், பாலியல் சீண்டலில் பரமேஸ்வரன் ஈடுப்பட்டது போல் வேறு யாருக்கெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

நாகையில் குழந்தைகள் காப்பகம் நடத்தி நம்பிக்கையாக இருக்க வேண்டிய நிறுவனரே குழந்தைகளிடம் பாலியல் சம்பவத்தில் ஈடுப்பட்டு நம்பிக்கை மோசடி செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Also Read: போலாந்து பெண்ணுக்கு 6 ஆண்டுகள் தொடர் பாலியல் தொல்லை: தனியார் நிறுவன அதிகாரியை தட்டி தூக்கிய மும்பை போலிஸ்