Tamilnadu

மாடியில் இருந்த செல்போன் Tower பாகங்களை கழற்றி இரும்பு கடையில் விற்பனை: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

ஏர்செல், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகள் பாதிக்காமல் இருக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் செல்போன் டவர்களை அமைத்துள்ளனர்.

பல குடியிருப்பு வீடுகளின் மேற்பகுதியில்தான் அதிகமான செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அமைக்கும் போது குடியிருப்பு உரிமையாளர்களிடம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு செல்போன் டவர்களை அமைக்கின்றனர்.

இந்நிலையில், குடியிருப்பில் அமைக்கப்பட்ட செல்போன் டவர் மாயமாகியுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு வடக்கு மாடவீதியில் சந்திரன், கருணாகரன்,பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு ஏர்செல் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஒப்பந்தப்பத்திரம் பதிவு செய்து நிறுவனத்தின் சார்பில் மாத வாடகை கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து 2018ம் ஆண்டு முதல் ஏர்செல் செல்போன் நிறுவனம் மூடப்பட்டதால் டவர் செயல் படாமல் இருந்துள்ளது. இதனால் வீட்டின் உரிமையாளர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக வாடகை கொடுக்கவில்லை.

இந்நிலையில் எர்செல் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கடந்த பிப்ரவரி 9ம் தேதி செல்போன் டவரை சென்று ஆய்வு செய்துள்ளார். பிறகு மீண்டும் நேற்று அங்குச் சென்று பார்த்தபோது இருந்த இடத்தில் செல்போன் டவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஏர்செல் டவர் துருப்பிடித்து கீழே விழும் நிலையிலிருந்ததால் மேற்படி டவரின் அனைத்து பாகங்களையும் கழற்றி பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து விட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த டவரின் மதிப்பு.ரூ.8,62,089 என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ரூ.100 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ.4 கோடியை சுருட்டிய கும்பல்: சொகுசு விடுதியில் வைத்து கைது!