Tamilnadu

புதிய செருப்பில் அசிங்கம் செய்ததால் நாய் கொலை: படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை கைது செய்த போலிஸ்!

தேனி மாவட்டம் பெரியகுளம், மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ். இவர் சென்னிமலையில் கட்டுமான பணிகளுக்கான சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.மேலும் தினேஷ் ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகிறார். இதில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

அந்தவகையில் கடந்த மார்ச் 9ம் தேதி இறந்த நாய் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 'நான் வாங்கிய புது செருப்பில் நாய் அசிங்கம் செய்ததால் போட்டு தள்ளிவிட்டேன்' என்றும் பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விலக்கு ஆர்வலர்கள் அவருக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் நாயை கொன்று ஃபேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பு ஆர்வலர் பிரேம் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த தினேஷை ஈங்கூர் நால்ரோடு பகுதியில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல் பிரேசில் நாட்டில் பக்கத்து வீட்டு நாய் ஒன்று குரைத்து கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 82 வயது மூதாட்டி ஒருவர் அதனை உயிரோடு புதைத்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் விலங்குகள் மீதான அன்பு மக்களிடத்தில் குறைந்து வருவதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகிறது.

Also Read: குரைத்து கொண்டே இருந்ததால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த பிரேசில் பாட்டி.. அதிர்ச்சி !