Tamilnadu

விழுப்புரத்தில் தொலைந்து போன பைக்கை 48 மணி நேரத்தில் சென்னையில் மீட்ட போலிஸார்.. குவியும் பாராட்டு!

சென்னை ராயபுரம் எம்.எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி சென்னை போக்குவரத்து போலிஸார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் அதிவேகமாக வந்துள்ளனர்.

இதனை கண்ட போக்குவரத்து போலிஸார் இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தவுடன் வண்டியில் பயணம் செய்த இருவரும் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். பின்னர் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அந்த இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து பதிவெண் அடிப்படையில் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த வாகனம் பாண்டிச்சேரி மாநிலம் முதலியார் பகுதியை சேர்ந்த அழுமொல் ரிஷிதர் என்பவருக்கு சொந்தமான வாகனம் என தெரிய வந்தது. உடனே பாண்டிச்சேரியில் உள்ள ரிஷிதரை செல்போன் மூலமாக ராயபுரம் போக்குவரத்து போலிஸ்சார் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அப்பொழுது ரிஷிதர் விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் தனது வாகனத்தை மர்ம நபர்கள் திருடு சென்று விட்டதாகவும், இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரிஷிதர் சென்னை வரவழைக்கப்பட்ட அவரிடம் வண்டி தொலைந்து போனதற்காக காவல்துறை தரப்பில் வழங்கிய முதல் தகவல் அறிக்கையை பெற்றுக்கொண்டு அவரிடம் மீண்டும் அவரது இரு சக்கர வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து வண்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வாகன தணிக்கை சோதனையின் போது வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்ற இருவர் மீது ராயபுரம் குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருடு போன தனது வண்டியை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்ததற்காக ரிஷிதர் கடிதம் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் தொலைந்து போன வண்டியை 48 மணி நேரத்தில் சென்னையில் கண்டுபிடித்துக் கொடுத்த போக்குவரத்து போலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

Also Read: போலிஸாருக்கு எதிராக சைகை செய்து REELS வெளியிட்ட இளைஞர்கள்.. போக்குவரத்து போலிஸார் அதிரடி நடவடிக்கை!