Tamilnadu

நொடி பொழுதில் உயிர் தப்பிய காவலர்; தப்பி ஓடிய ரவுடியை சுட்டு பிடித்த போலிஸ்: சினிமா பாணியில் ஆக்ஷன் சீன்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கமலாபுரத்தில் நடைபெற்ற ராஜ்குமார் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 6 பேரை போலிஸார் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், தலைமுறைவாக இருந்த பிரவீன் என்பவரை போலிஸார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளி பிரவீன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் மானேரா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவனை போலிஸார் பிடிக்க சென்ற போது, குற்றவாளி பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனால் போலிஸார் பிரவீனை முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுடப்பட்ட குற்றவாளி பிரவீன் மற்றும் காயமடைந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ ஆகிய இருவரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது பற்றி எஸ்.பி சுரேஷ் குமார் கூறுகையில், தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி பிரவீனை கைது செய்ய முயன்ற போது போலிஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில், அவரை முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்ததாக தெரிவித்தார்.

Also Read: “Happy Street நிகழ்ச்சிக்கு வரவேற்பு கூடியுள்ளது.. தொடர்ந்து நடத்த ஆலோசனை” : காவல்துறை இணை ஆணையர் பேட்டி!