Tamilnadu

”மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய நடிகர் ரஜினி!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்,'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்பட கண்காட்சியைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கும் வகையில், பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மிசா காலகட்டத்தில், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விளக்கும் வகையில் 'மாதிரி அரங்கு' அமைக்கப்பட்டுள்ளது. இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தப் புகைப்பட கண்காட்சியை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது சினிமா நடிகர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என தினந்தோறும் அனைவரும் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை அனுபவத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டு ரசித்தார்.. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "என் இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான்.

54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர் அவர். கட்சியில் உழைத்து படிப்படியாகப் பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அவர் ஊழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட நாள் ஆயுள் உடன் இருந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவருக்கும் எனக்குமான நட்பைச் சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் வரும் போது சொல்வேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நட்பை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது”: முதல்வரின் அனல் பேச்சு!