Tamilnadu

வங்கதேசம் To சென்னை.. சிகிச்சைக்காக விமானத்தில் வந்த பயணிக்கு நடுவானில் நேர்ந்த சோகம்!

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் முகமது அபு. இவருடைய மனைவி குர்ஸிதா பேகம் (43). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை மோசமாகவே இருந்து வந்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடிவெடுத்துள்ளார். இதனால் கணவன் முகமது அபு, தனது மனைவி குர்ஸிதா பேகத்தை அழைத்துக்கொண்டு வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் வந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவர் விமானப் பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிக்குத் தகவல் கொடுத்தனர்.உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தகவல் கொடுத்து, மருத்துவர்கள் குழுவிதயாராக இருக்கும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடன் அங்குத் தயாராக இருந்து மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது குர்ஸிதா பேகம் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வு முடித்த உடன் குர்ஸிதா பேகம் உடல் அவரது கணவர் முகமது அபுவிடம் ஒப்படைக்கப்பட்டு வங்கதேசத்திற்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: செய்தி சேகரிக்க வந்த மூத்த பத்திரிகையாளர் ஹோட்டல் அறையில் மரணம்!