Tamilnadu

“திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலையை பெற உரிமை உள்ளது” : ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளதாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமையில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி அமர்வு, சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடகா அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது.

மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: சிறார் திரைப்படத் திருவிழா.. வெற்றி பெறும் மாணவர்களை HollyWood அழைத்துச் செல்லும் பள்ளிக் கல்வித்துறை !