Tamilnadu

"தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது" - ஆய்வுக்கு வந்த பீகார் அதிகாரிகள் குழு பேட்டி !

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரப்பட்ட வதந்தி குறித்து ஆய்வு செய்ய பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்தனர். இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்தை பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் சந்தித்தனர்.

இந்நிலையில், பீகாரில் இருந்து வந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் உடன் பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொண்டது பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு பணி படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அதிகாரிகள் குழுவினர், "திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு நன்றி. தவறான வீடியோக்களை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்.

கட்டுப்பாட்டு அறை துவங்கியது, ஒலி பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது, பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது, மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

அதன்பின்னர் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் " இந்த விவகாரம் குறித்து டிவிட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் தவறான தகவலை பதிவிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்கு பதிவு செய்து யூ டியூப் மற்றும் டிவிட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம்.

இரண்டு வழக்குகளை ஏற்கனவே பதிந்துள்ள நிலையில் தற்போது, வட மாநிலத்தோடு தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ வதந்தியை பரப்பிய மூன்றாவது நபராக டி ஆக்டிவ்ஸ்ட் என்ற youtube சேனலை நடத்தி வரும் வேட் சர்மா என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர்களை கைது செய்ய இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை இன்று மாலை பீகார் விரைகிறது" எனக் கூறினார்.

Also Read: “சொந்த கட்சியிலே வேவு பார்த்து ஆனந்தம் அடையும் அல்பத்தனமான #420மலை” அண்ணாமலையை விமர்சித்த பாஜக நிர்வாகி!