Tamilnadu

சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி.. சட்டென்று மோதிய கார்.. இரவில் 5 பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள வட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கவிதாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் இருக்கும் பொன்னர் - சங்கர் கோயிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வை காண ரவி, தனது மனைவி கவிதா, இவர்களது உறவினர்களான கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி மற்றும் கவிதாவின் தம்பியின் 4 வயது மகள் லக்சனா உள்ளிட்டோர் காரில் சென்றுள்ளனர். அங்கே நிகழ்வை முடித்து விட்டு நேற்று மீண்டும் திருச்செங்கோடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரை ரவி ஓட்டி வரவே அனைவரும் பேசிக்கொண்டு வந்தனர். அப்போது பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது ரவி ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி சட்டென்று மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 4 வயது குழந்தை உட்பட 7 பெரும் கடுமையான காயமடைந்தனர்.

இதனை கண்ட அந்த பகுதிவாசிகள் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மீட்பு குழுவினர் வந்து அனைவரையும் மீட்டனர். அப்போது இந்த விபத்தில் காரில் வந்த காந்தாயி, சாந்தி, குஞ்சம்மாள், மகாலட்சுமி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தை, ரவி, மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பி வீட்டுக்கு செல்லும்போது நிகழ்ந்த கோர விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘இனி வெறும் வடிவேலு இல்ல.. டாக்டர் வடிவேலு’ - கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகருக்கு குவியும் வாழ்த்துகள்!