Tamilnadu

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும்?: மகிழ்ச்சியான செய்தி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி முழுவதும் இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பேருந்து நிலையம், மெட்ராஸ் ஹோட்டல், மஜீத் வீதி உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். சம்பத் நகர் பகுதியில் வேன் பிரச்சாரம் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 85 % வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 15 சதவிகித வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏழை மக்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

கஜானாவை காலி செய்துவிட்டு சென்ற ஆட்சிதான் முந்தைய அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டைக் கடனில் தத்தளிக்க வைத்துவிட்டுச் சென்றவர்கள் முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள்.

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் முந்தைய அ.தி.மு.க ஆட்சி நிறைவேற்றவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே

மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அடுத்த மாதம் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும். அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘ஆபரேஷன் தாமரை’.. சிவசேனா விவகாரத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்ட பா.ஜ.க : முரசொலி கடும் தாக்கு!