Tamilnadu

இறந்ததாக நினைத்த தாய்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் முன்பு நிறுத்திய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்!

சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபர்களை மீட்டு, பாதுகாப்பாகக் காப்பகத்தில் தங்க வைத்து அவர்களை குடும்பத்துடன் மீண்டும் ஒப்படைக்கும் வகையில் “காவல் கரங்கள்” என்ற திட்டத்தினை சென்னை காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் படி மீட்கப்பட்ட 12 பேரை அவர்களது குடும்பத்துடன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறை கூடுதல் ஆணையர் லோகநாதன், மீட்கப்பட்ட 12 நபர்களை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைத்து15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்வில் பேசிய காவல் துறை கூடுதல் ஆணையர் லோகநாதன், "'காவல் கரங்கள்' செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் தன்னார்வலர்கள்தான். அவர்களால்தான் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரமுடிகிறது.

சாலையில் மீட்கப்படும் நபர்களுக்கு முதலில் மருத்துவச் சிகிச்சை அளித்து பின்னர் அவர்களை காப்பகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்படுகின்றனர். பிறகு அவர்களது முகரியை தேடி கண்டுபிடித்து அவர்களது குடும்பத்துடன் ஒப்படைக்கப்படுவார்கள். இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

போரூரைச் சேர்ந்த விஜயகுமாரின் தாய் 2005 ஆம் ஆண்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவர் கிடைக்காததால் தாய் இறந்து விட்டதாக நினைத்து 18 ஆண்டுகளாக அவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து வந்துள்ளனர். பின்னர் காவல் கரங்கள் மூலம் அவரது தாய் உயிரோடு இருப்பதும் அவரை மீட்கப்பட்டதும் விஜயகுமாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் அவரது தாயை 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகனிடம் போலிஸாடர் ஒப்படைத்துள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபர்.. ஹீரோவாக மாறிய மாணவர் : சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?