Tamilnadu

"அதானி விவகாரத்தில் வெட்கக்கேடாக நடந்து கொள்ளும் ஒன்றிய அரசு".. CPI முத்தரசன் கடும் சாடல்!

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சூலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கானது அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் பட்ஜெட். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ. 85 ஆயிரம் கோடியாக இருந்த நிதியை ரூ.60 ஆயிரம் கோடியாகக் குறைத்துள்ளது.

அதானி நிறுவனத்தின் பல்லாயிரம் பங்குச் சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விசாரணைக்கு அமைத்திட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இது குறித்து மோடி எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வரும் எடப்பாடி பழனிச்சாமி, மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியினை குறைத்தது குறித்தும், அதானி நிறுவனத்தின் மோசடி குறித்தும் மக்களுக்கு உரிய பதில் அளித்து விட்டு வாக்கு சேகரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் மாயம்.. குடியரசு தலைவர் அலுவலகத்தின் பதிலால் பரபரப்பு.. பின்னணி என்ன ?