Tamilnadu

Ticket இல்லாமல் பயணம் செய்த வட மாநிலத்தவர்: 112 பேரை நடு வழியில் இறக்கிவிட்ட அதிகாரிகள் -சேலம் அருகே பரபர

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமாக இருந்து வருகிறது. நாடுமுழுவதும் மக்கள் எங்குச் செல்ல வேண்டுமானாலும் முதலில் ரயில் பயணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

வட மாநிலத்தவர்கள் அதிகமாகத் தென்மாநிலங்களுக்குப் புலம் பெயர் தொழிலாளர்களாக வந்து செல்கின்றனர். இப்படி இவர்கள் வந்து செல்வதற்கு ரயில்களையே பயன்படுத்துகின்றனர். இவர்களில் சில பேர் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் பலர் டிக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் பல நேரங்களில் இவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் இடையே அடிக்க பிரச்னை எழுந்து வருகிறது. இப்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இதே போன்ற சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த இரயில் பகல் நேரத்தில் தமிழ்நாடு, சேலம் இரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சுமார் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் இரயில் புறப்பட்டது.

அப்போது சேலம் இரயில் நிலையத்தில் இருந்து அதிகமான வடமாநிலத் தொழிலாளர்கள் எறியுள்ளனர். அதிலும் செகண்ட் கிளாஸ் பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்யக்கூடிய அந்த பெட்டிகளில் இவர்கள் வந்து ஆக்கிரமத்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அமர இடம் இல்லை.

இதனால் வட மாநிலத்தவர்களுக்கும், முன் பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக பயணிகள் சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு சம்பவத்தை கூறி புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சேலம் அருகே உள்ள தின்னப்பட்டி பகுதியில் அதிகாரிகள் அந்த இரயிலை நிறுத்தினர்.

பின்னர் புகார் எழபட்ட பகுதி உட்பட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் டிடிஆர் விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்கிருந்த அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் இருக்கிறதா என்பதை சோதனை செய்தனர். குறிப்பாக வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டிக்கெட் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட வடமாநில பயணிகள் பயணித்தது தெரியவந்தது.

தொடர்ந்து சுமார் 112 வடமாநில பயணிகளை பெட்டியில் இருந்து அதிகாரிகள் இறக்கி விட்டனர். பின்னர் பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து இரயிலும் இயக்கப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரையும் ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக இதே போல் கடந்த டிசம்பர் மாதம் வாரணாசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயில் ஒன்றில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் திடீரென வட மாநிலத்தவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஏறி அமர்ந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்பதால் பயணிகள் கடும் ஆவேசத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மக்களே உஷார்.. சமயலறையில் ‘உஷ்..’ என்று கேட்ட சத்தம்: சிலிண்டரை தூக்கி பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!