Tamilnadu

"புதுமைப் பெண்" திட்டத்தால் நாட்டுக்கே கிடைக்கப்போகும் பயன்கள்: பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " 100 ஆண்டுகளுக்கு முன்னால் மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர். 1938 ஆம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காக திருச்சி முதல் சென்னை வரை நடந்த பேரணியில் நடந்து வந்தவர் அவர். திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகள் தரவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முடிவெடுத்து - அதனை முதன்முதலாக வழங்கியது மூவலூர் அம்மையாருக்குத்தான். அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் குடியரசு தினம் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி விடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மகளிர் ஏழு பேரின் திருவுருவச் சிலைகளை வைத்திருந்தோம்.அதில் ஒருவர் தான் இராமாமிர்தம் அவர்கள்.அவரது பெயரால் இந்த திட்டம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்க்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு மூவலூர் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். முதற்கட்டமாக இத்திட்டம் 05.09.2022 அன்று சென்னையில் பாரதி மகளிர் கல்லூரியில் துவங்கப்பட்டது.

1.16 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இதற்காக கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 69.44 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. படிப்பை பாதியில் நிறுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த 12 ஆயிரம் மாணவிகள் - இத்தொகை கிடைத்ததால் படிப்பில் தொடர்கிறார்கள் என்பதுதான் இந்த திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.

பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் அவர் கல்லூரிக்குள் நுழைகிறார்.

இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும்.

படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும்.

அறிவுத்திறன் கூடும்.

திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள்.

பாலின சமத்துவம் ஏற்படும்.

குழந்தை திருமணங்கள் குறையும்.

பெண் அதிகாரம் பெறுவாள்.

சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள்.

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

திராவிட மாடல் ஆட்சியின் மையக் கரு என்பது இதுதான்" என தெரிவித்தார்.

Also Read: “வினோத் அதானிக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது ?” - மோடி அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி !