Tamilnadu

'பரியேறும் பெருமாள்'படத்தில் நடித்த மூத்த தெருக்கூத்து கலைஞர் மரணம்.. கலையுலகில் அடுத்தடுத்து சோகம் !

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நெல்லை தங்கராசு. இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்துள்ளார். கரகாட்ட கலைஞரான இவர் நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரித் தோட்டத்தில் இரவுக் காவலாளியாகவும் பணியாற்றிவந்துள்ளார்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவரின் கதாப்பாத்திரம் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் நிர்வாண நிலையில் இவர் ஓடியது பல்வேறு ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நெல்லை தங்கராசுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோரும் சிறந்த கலைஞருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசுக்கு நாட்டுப்புற கலைச்சுடர் விருது கொடுக்கப்பட்டது.

மேலும், அவரது இல்லத்தின் பரிதாப நிலை அறிந்து த.மு.எ.க.ச அமைப்பினர் மற்றும் அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இணைந்து தங்கராசுக்கு வீடும் கட்டிக்கொடுத்தனர்.

அந்த வீட்டுக்கான சாவியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தங்கராசு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அந்த வீட்டில் அவர் வசித்துவந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் தங்கராசு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று பிரபல திரைப்பட இயக்குனர் சண்முகப்பிரியன் (71), நேற்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்த நிலையில், இன்று காலை ‘கலா தபஸ்வி’ என அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்தும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் தற்போது நடிகர் தங்கராசுவும் உயிரிழந்துள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அந்த ‘பேனா’ காவல் அரண்..” : கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்புசுற்றுகிறார்களை வெளுத்து வாங்கிய முரசொலி!