Tamilnadu

நகைப்பட்டறையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. சாலையில் சென்ற மாணவர்கள் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மேட்டுத் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் நகை பட்டறை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று பிற்பகல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக நகையை உருக்க வைத்திருந்த தீப்பொறியில் பரவி எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.

இதில் முன்பக்க ஷட்டர் தூக்கி வீசப்பட்டதில் அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் அஸ்லாம், தனுஷ், விஷ்வா மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தீனதயாளன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் நான்கு பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிவாயு சிலிண்டர் வெடித்து எரிந்து கொண்டிருந்த தீயை போராடி கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்து குறித்து டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: AR.ரகுமான் ஃபிலிம் சிட்டியில் விபத்து.. படப்பிடிப்பின் போது கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி !