Tamilnadu

737 காளைகள்.. 250 மாடுபிடி வீரர்கள்.. களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. வென்றவர்கள் விவரம் !

தொட்டுப்பாரு... மச்சக்காளை மிரட்டுது ஆஹா... சூப்பர் மாடு, ஒரு தங்கக்காசு.. ஆஹா சூப்பர் மாடு.. ஒரு தங்கக்காசு.. ஒரு தங்கக்காசு.. என தொடர்ந்து உற்சாக வார்த்தைகளால் புத்துணர்ச்சியுடன் தொடங்கியது பொங்கல் திருவிழா..

அந்தவகையில், இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டியது.

காளைகள் ஓடும் பகுதியான அவனியாபுரம் மெயின் சாலையில் இருந்து இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் வரை மூங்கில் தடுப்பில் இரும்பு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. போட்டியின்போது வீரர்கள் காயம் ஏற்படாமல் தரையில் தேங்காய் நார் பரப்பப்பட்டுள்ளது.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 11சுற்றுகளாக நடைபெற்ற நிலையில், 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடுகளை பிடிக்க 250 வீரர்கள் களமிறங்கினர். இதில் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெயஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் முதலிடம் பிடித்தார்.

முதலிடம் பெற்ற விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கார் பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. இவர் மின்வாரிய ஹேங்மேனாக பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 17 காளைகளை அடக்கி மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 13 காளைகளை அடக்கி விளாங்குடியை சேர்ந்த பாலாஜி என்பவர் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார். மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை காமேஷ் என்பவரின் மாட்டுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Also Read: 'வாரிசு’ படத்தின் குஷ்பு நடித்த காட்சி நீக்கப்பட்டதா ? வெளியான தகவல்.. முழு விவரம் என்ன ?