Tamilnadu

"நீட் தேர்வை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை?".. பேரவையில் பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர்ந்து கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அலுவல் ஆய்வு கூட்டம் நடந்த பிறகு ஜனவரி 13ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கால்பந்து ஜாம்பவான் பீலே, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு அன்றைய சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். பின்னர் ஆளுநர் உரைமீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி நீட் தேர்வு தொடர்பான பேசினார். இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர்தான். பொறியியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வு வந்தபோதும் அதைத் தடுத்தவர் கலைஞர்தான் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய பழனிசாமி, நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற பிரச்சனையை எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தவரைத் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா இருந்தவரை கூட நீட் தேர்வை நுழையவிடவில்லை. ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? என கேள்வி எழுப்பினார்.

Also Read: சேது சமுத்திரத் திட்டம்: அடிப்படை அறிவு கூட இல்லாமல் அறிக்கை விடலாமா 'அரைகுறை' அண்ணாமலை? - முரசொலி!