Tamilnadu

மாமல்லபுரத்தில் துணை நகரம் - 500 மின்சாரப் பேருந்துகள் : ஆளுநர் உரையில் இடம் பெற்ற புதிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரையில் மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம், 500 மின்சார பேருந்துகள் போன்ற புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மாமல்லபுரம் அருகே புதிய நகரம்:-

சென்னை அருகே மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில், நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்களைப் பெற்றுத் திரட்டி, திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவற்றை நில வகைப்பாடு செய்து, நில உரிமையாளர்களுக்குப் பங்கீடு செய்து வழங்கி புறநகர் வளர்ச்சிக்கு வித்திடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதே நிலத்திரட்டு முறையைப் பின்பற்றி கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டு, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். இச்சாலையும் நான்குவழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகரப் பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம் விளங்கும்.

500 மின்சாரப் பேருந்துகள்:

பழைய பேருந்துகளை மாற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பசுமைப் பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசு உறுதிப்பூண்டுள்ளது. 2213 BS VI பேருந்துகள் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் KFW நிதியிலும் 1000 BS VI பேருந்துகள் மாநில அரசு நிதியுதவியிலும் கொள்முதல் செய்யப்பட்டு இவ்வாண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் போன்ற புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது.

Also Read: #GetOutRavi - “சங்பரிவாரின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் RN.ரவி” : வைகோ ஆவேசம் !