Tamilnadu

விளையாடி கொண்டிருக்கும் போது கதறி அழுத குழந்தை.. மருத்துவமனையில் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கிய கிராமம் !

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் - வேதநாயகி தம்பதியினர். கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் ஆன இவர்களுக்கு தற்போது தட்சயா என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

வழக்கமாக குழந்தையை விளையாட விட்டுவிட்டு வேதநாயகி, வீட்டு வேலை செய்து வருவார். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் அதே போல் குழந்தை தனியாக வீட்டினுள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராஜேஷும் வேதநாயகியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது சிறிது நேரத்திலேயே குழந்தை கதறி அழுததால் என்னவேன்று பெற்றோர் ஓடி வந்து பார்த்துள்ளனர். குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயன்றும் சமாதானம் ஆகாத குழந்தை விடாமல் அழுத்துள்ளது. அப்போது அவர்கள் வீட்டு வாசலில் வண்டு போன்ற பூச்சி ஒன்றை பார்த்துள்ளனர். பின்னர் குழந்தையின் ஆடையை கழற்றி பார்க்கையில், அதன் முதுகில் வீக்கம் இருந்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து அழுத சிறுமி சிறிது நேரத்திலே மயக்கமடைந்துள்ளது. இதனை கண்டதும் பதறிப்போன பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அதன்பேரில் தஞ்சை சென்ற பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விஷப்பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !