Tamilnadu

கல்லூரி மாணவரிடம் மிரட்டி செல்போன் பறித்த கும்பல்.. காட்டி கொடுத்த ‘FIND MY DEVICE..’ தாம்பரத்தில் பரபர !

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மல்லீஸ்வரி நகரில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. அங்கு கல்லூரி மாணவர்களான கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை மிரட்டியுள்ளனர். அதோடு இருதரப்பினருக்குள்ளும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த கும்பல், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு அவர்கள் செல்போன்களை பறித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்களின் மொபைல் போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கார்த்திக் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மொபைல் போனில் ஆக்டிவில் இருந்த 'find my device' என்ற கருவி மூலம் செல்போன் இருக்குமிடைத்தை காவல்துறையினர் அறிந்தனர்.

தொடர்ந்து செல்போன்கள் இருக்குமிடமான கோவளத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மேடவாக்கத்தைச் சேர்ந்த விவேக் (27), சேலையூரைச் சேர்ந்த விக்னேஷ்(27) மற்றும் பெப் கார்த்திக் (27), புது பெருங்களத்தூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (27) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் ‘சென்னை சங்கமம்’!