Tamilnadu

“பறிமுதல், கைது, முடக்கம்..” - தமிழ்நாட்டில் அதிரடியாக நடந்து வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.O !

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா வேட்டை 2.0 அருமையாக செய்லபடுத்த பட்டது.

இந்த நிலையில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், கஞ்சா வேட்டை 1.O, கஞ்சா வேட்டை 2.O நடந்து முடிந்த நிலையில் 12.12.2022 முதல் 30.12.2022 தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.O நடந்து வருகிறது.

கடந்த 19 நாள்களில், 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1,84,71,085 ரூபாய். மதிப்புள்ள, சுமார் 1610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 8,83,934 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக போதைப் பொருள்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாக 282 காவல் நிலைய எல்லைகளில் பெரும்பாலும் போதைப்பொருள்களின் விற்பனை அறவே தடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காவல் நிலையங்களில் கடந்த ஆறு மாதத்தில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகும் போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் பதிவாகவில்லை.

இது இன்னும் தொடர்ந்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போதைப் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் வழியாக வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிக காவலர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: “அம்புட்டும் பொய்..” பாஜக டெய்சி மகள் ஷர்மிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. என்னதான் செய்தார் அவர் ?