Tamilnadu

36 CCTV ஆய்வு.. சாலையில் தவறவிட்ட 40 பவுன் தங்க நகை: 2 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்!

ஆவடி அருகே உள்ள நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி. இவரது மகன் ஹரிஷ் சங்கர். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிறன்று இரு சக்கர வாகனத்தில் 40 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, ஜாக் நகரில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பிறகு எடுத்து வந்த நகையை சகோதரியிடம் கொடுக்கலாம் என இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை பை எடுக்கும் போது பை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அன்பழகி உடனே திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் உள்ள 36 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அன்பழகி வைத்திருந்த பை நகையோடு கீழே சாலையில் விழுந்துள்ளது தெரியவந்தது. மேலும் அந்த பையை யாராவது எடுத்தார்களா என்பதையும் போலிஸார் ஆய்வு செய்தனர். ஆனால் யாரும் பையை எடுக்கவில்லை. உடனே போலிஸார் அங்கு சென்று சாலையிலிருந்த 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

பின்னர், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மூலமாக, அன்பழகி மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோரிடம் 40 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்தனர். மேலும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு செல்லும்போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

Also Read: “சேது சமுத்திரத் திட்டம்.. அத்வானி & ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்” : அம்பலப்படுத்திய முரசொலி !