
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.18) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் 21% பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?
திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி
விளையாட்டுத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் 21% பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தீனதயாள் உபாத்யாய திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை பாலின வாரியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
பெருநகரங்களை நரகமாக்கும் காற்று மாசு – அலட்சியமாக கையாளும் ஒன்றிய அரசு!
ராஜாத்தி சல்மா எம்.பி. கண்டனம்
2019-ல் தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் (NCAP) செயல்பாடுகளை அளவிட நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.
இலக்கு எட்டப்படாத 131 நகரங்களில் PM10 அளவை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? டெல்லி உள்பட முக்கிய பெருநகரப் பகுதிகளில் அதிக காற்று மாசுவிற்கான காரணங்கள் மற்றும் NCAP திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.






