Tamilnadu

வடபழனி கோயில் டிக்கெட் வழங்குவதில் மோசடி.. இரவோடு இரவாக அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சேகர்பாபு !

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வந்ததில் இருந்தே பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறைக்கு பல நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்தே பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக கோயில் நிலங்களை மீட்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முக்கியமாக கோவில்களை சீரமைத்தது, பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

கடந்த ஒன்றரை வருடத்தில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டு இவரது செய்லபாடுகள் பலரது பாராட்டுகளையும் பெற்றதால், அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இவருக்கு சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

அறநிலையத்துறைக்கு பல நல்ல விஷயங்கள் நடக்க, கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் மக்களிடம் இருந்து எழுந்தது. அதோடு இதில் முறைகேடு நடப்பதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது. இதனால் அதிரடி நடவடிக்கையாக கோயிலில் அனைவரும் ஒன்று என்றும், இது போன்ற சிறப்பு தரிசனம் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதற்கு முதற்கட்டமாக பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு தரிசனத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தனது குடும்பத்தோடு வடபழனி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது இவர் 3 டிக்கெட்டுகள் கேட்கவே, 50 ரூபாய் டிக்கெட் இரண்டும், 5 ரூபாய் டிக்கெட் ஒன்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நீதிபதி கேள்வியெழுப்பவே, ஊழியர்கள் மழுப்பலாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து நீதிபதி புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று இரவு வடபழனி கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, முறைகேடு குற்றச்செயலில் ஈடுபட்ட தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, தரிசன டிக்கெட் சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், "வடபழனி முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்ய சென்றபோது, பணியில் இருந்த அறநிலையத் துறை அலுவலர்கள் டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், அந்தப் புகார் தொடர்பாக அறநிலையத் துறை அலுவலர்கள் ரேவதி, ரவி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மீஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

Also Read: 8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.. 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!