Tamilnadu

“அதோ பாரு ரயிலு.. ரயிலுக்குள்ள...” - ஆர்வமாக இரயிலில் தனியே பயணித்த சிறுவன் தவிப்பு !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி 8 வயதில் ரலீஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீடு திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது.

இந்த நிலையில் சிறுவன் தினமும் இரயிலை பார்த்து பார்த்து, அதில் செல்ல வேண்டுமென்று ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோரிடமும் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் தனியாக இரயில் நிலையத்திற்குள் வந்துள்ளார். அங்கே நின்று கொண்டிருந்த இரயிலை பார்த்ததும் அதில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். அந்த இரயிலோ இராமேஸ்வரம் செல்லக்கூடியது.

சிறுவன் தன்னை மறந்து வேடிக்கை பார்த்த சமயத்தில் இரயில் கிளம்பியுள்ளது. அப்படியே இரயில் சென்றுகொண்டிருந்தபோது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் திடீரென பயந்துள்ளார். இதனால் அவர் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கே செய்வதறியாது சுற்றி திரிந்துள்ளார். சிறுவன் அங்கும் இங்கும் அலைவதை கண்ட இரயில்வே அதிகாரிகள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது தனக்கு திருத்துறைப்பூண்டி எனவும், தான் இன்னாரின் மகன் எனவும் விவரங்களை தெரிவித்துள்ளார். அதோடு இரயிலில் பயணிக்க ஆசையாக இருந்ததால் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் குடும்பத்தாருக்கு தொடர்பு கொண்ட அதிகாரிகள், சிறுவனின் பெற்றோருக்கு அறிவுரை கூறி, அவரை பத்திரமாக ஒப்படைத்தனர்.

இரயிலில் பயணிக்க ஆசைப்பட்ட 8 வயது சிறுவன், நின்று கொண்டிருந்த இரயிலில் ஏறி தனியாக பயணம் செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Insta நண்பனை பார்க்க வீட்டை விட்டு சென்ற சிறுமிகள்: 4 மணி நேரத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைத்த தமிழக போலிஸ்