Tamilnadu

புயலில் காணாமல் போன கணவர்.. தேடி அலைந்த மனைவி.. களத்தில் இறங்கி மீட்டுக்கொடுத்த போலிஸார் !

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாண்டாஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரை பகுதியை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது சென்னை உத்தண்டி பகுதியில் கூலி வேலைக்கு சென்று திரும்பிய பெண் ஒருவர் மழையில் நனைந்தபடி கண்ணீர்விட்டு கதறியபடி தனது கணவரை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். மேலும், கணவர் பெயரை கூறி கத்தியபடி, எங்கே போனார் என்று தெரியவில்லையே என்று பதறிய நிலையில் சுற்றித்திரிந்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்த செய்தியாளர்கள் அங்கிருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் துரிதமாக செயல்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு காணாமல் போன அந்த பெண்ணின் கணவரை கண்டுபிடித்து மனைவியிடம் சேர்த்தனர்.

அந்த தம்பதியினரின் வீட்டில் தண்ணீர் புகுந்த நிலையில், அவர்கள் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், துரிதமாக செயல்பட்ட போலிஸாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.