Tamilnadu

U Turn எடுக்கும் போது குறுக்கே வந்த லாரி.. விரைவில் திருமணம் செய்ய இருந்த காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்சர்லையா பிரசாத். இளைஞரான இவர் சென்னையில் உள்ள திருமுடிவாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவரது உறவினர் பாபிலோனா. இவரும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் காதல் ஜோடிகள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பின்னர் ஜாபர்கான் பேட்டை செல்வதற்காக யூ டர்ன் எடுத்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காதலர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறகு இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் லாரியை ஓட்டிவந்த பொன்னன் என்பவரைக் கைது செய்தனர். விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “உலகின் தலைசிறந்த வீரர் ரொனால்டோவை நீக்கியது மிகப்பெரிய அவமானம்..” : காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆவேசம்!