Tamilnadu

“தமிழ்நாட்டில் 6ல் ஒரு மாணவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்களது துறைக்கு பெருமை” : அமைச்சர் நெகிழ்ச்சி!

தமிழின் இலக்கியச் செழுமையை உலகறிய செய்யும் வகையில் பொருனை இலக்கியத் திருவிழா தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நெல்லை மாநகரில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும். தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தபடுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

இரண்டு நாள் நடக்கும் பொருநை இலக்கிய விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், நேருஜி கலையரங்கம், மேலகோட்டை வாசல், பி.பி.எல் திருமணமண்டபம், நூற்றாண்டு மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “கலைஞரை பற்றி அண்ணா சொன்ன வார்த்தை, எனது தம்பி இருக்கும் இடம் தான் எனக்கு புனித இடம் என குறிப்பிட்ட பாளையங்கோட்டையில் இருந்து இந்த நிகழ்வு தொடங்குவது மகிழ்ச்சி தருகிறது.

அனைத்து நிகழ்வுக்கும் முத்தாய்ப்பான நிகழ்வு இலக்கிய திருவிழா என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மொழியை காக்க மொழிபோரும் எங்களால் நடத்த முடியும் பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளும் நடத்த முடியும். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம்.

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியும் இல்லாத வகையில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ் சாகித்ய அகாடமி விருது வழங்க வேண்டும் என கேரள மாநில எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் பேசும் போது தெரிவித்தார்.

இது குறித்த கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழின் பெருமையை பரைசாற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள்தொகையில் 6ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்களது துறைக்கு பெருமை. அரசு பள்ளி என்றால் வறுமையில் இருப்பவர்களுக்கு என்ற நிலையை மாற்றி, அரசு பள்ளி என்றால் பெருமை மிகுந்த்து என்ற நிலையை உருவாக்கி வருகிறோம்.

குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்லவேண்டும் என்பது நமக்கு கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதலமைச்சர் எழுத்தாளர்களுக்கு எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமே கனவு இல்லம் திட்டம்.

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சாகித்திய அகாடெமி விருதுபெற்ற வண்ணதாசன், கேரள மாநில பிரபல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன், எழுத்தாளர் பவாசெல்லத்துரை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “வரலாற்றை உருவாக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு!