Tamilnadu

NASA Challenge போட்டி : ‘Virtual Reality’ல் செயல்படும் APP-ஐ வடிவமைத்து தமிழ்நாட்டு மாணவர்கள் அசத்தல் !

அமெரிக்க விண்வெளி ஆராய்சி மையமான நாசா நடத்திய போட்டியில் பள்ளி மாணவர்கள் பாடங்களை எளிதாக கற்கும் வகையில், முப்பரிமான முறையில் மெய்நிகர் செயல்படும் கைபேசி செயலியினை வடிவமைத்து திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பன்னாட்டு அளவிலான போட்டிக்கு அடுத்தகட்டமாக தகுதி பெற்றுள்ளனர்.

”அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) செயற்கை கோள்களின் தரவுகள் மற்றும் அதன் செயல் முறைகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்படும் கைபேசி செயலியை உருவாக்கும் (NASA Mobile App Challenge) போட்டியை நடத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்சி மையம் போன்ற பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிஞர்கள் நடுவர்களாக பங்கேற்ற இப் போட்டியை நடத்தினர்.

இந்த போட்டியில் திருநெல்வேலி அண்ணா பல்கலை கழகத்தை சார்ந்த மாணவர் டொமினிக் வால்டர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியை சார்ந்த குரு பிரசாத் ஆஸ்திரேலியாவில் பயின்று வரும் ஷெல்வின் ஜோநாதன் ஆகிய மூன்று மாணவர்கள் கலந்து கொண்டு தயாரித்திருந்த செயலி அகில இந்திய அளவில் முதல் பரிசினை பெற்றுள்ளது.

உலக அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 162 நாடுகளிலிருந்து 31,561 மாணவர்கள் 5,327 குழுக்களாக கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 323 குழுக்களில் தென்னிந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 90 குழுக்களில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் அணி முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்டமாக பன்னாட்டு அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவர்கள் இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர்களை நேரில் சந்தித்து தங்கள் செயலியின் செயல்முறையை காட்டி அவரிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.

மெய்நிகர் தொழில்நுட்பம் (Augmented Reality / Virtual Reality) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த செயலியின் வடிவமைப்பை தற்போது பள்ளி மாணவர்கள் தங்களது பாடங்களை எளிதாக கற்பதற்கு பயன் பெறும் வகையில் மாற்றியுள்ளனர். இதன் முதற்கட்டமாக 6-ம் வகுப்பு அறிவியல் பாடங்கள் முழுவதையும் இதில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

பாடங்களிலுள்ள முக்கியப் பகுதிகளை முப்பரிமண வடிவில் கண் எதிரே நேர் இருப்பது போல உணர்ந்து பாடங்களை எளிதாக படிக்க முடியும். எடுத்துக்காட்டாக இதயத்தின் செயல்பாடுகள் பற்றி பாடம் படிக்கும் ஒரு மாணவன் இதயவடிவிலான முப்பரிமாண படத்தை தனது கைபேசியிலுள்ள இந்த செயலி மூலம் தேர்ந்தெடுத்து, அதை தனது மேசையின் மேல் வைத்துக் கொண்டு நமது இதயத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுடன் படிக்க முடியும்.

"இனி வருங்காலத்தில் இது போன்ற மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முப்பரிமாண வடிவிலான கல்வி கற்கும் முறைகள் மட்டுமே மாணவர்களிடம் கல்வி கற்கும் ஆசையை மேம்படுத்தும். அதற்குரிய செயலியினை முழுமையாக வடிவமைத்த இந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி மாணவர்கள் தங்களது பாடங்களை எளிதாக கற்கும் வகையில் முப்பரிமாண முறையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் செயல்படும் செயலியினை வடிவமைத்த திருநெல்வேலி மாவட்ட அண்ணா பல்கலைக் கழக மாணவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அதன் செயல் முறைகளையும் செய்து காண்பித்தனர்.

Also Read: “கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லுங்கோ..” : ATM Card நம்பரை கேட்ட மோசடி நபரை வறுத்தெடுத்த முதியவர்!