Tamilnadu

அபராதம் செலுத்த தவறினால் வாகனம் ஏலம்.. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை எச்சரித்த போலிஸ்!

இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களுக்கு ரூ. 10000 அபராதம் விதிக்கப்பட்டு, அவை நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதைத் தடுக்க போக்குவரத்து போலிஸார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,கடந்த வாரத்தில் இருந்து தமிழ்நாட்டில் முதல் சென்னையில் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. அதில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராத விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லது அவருக்குப் பின்னால் அமர்ந்து செல்வோர் குடித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த விதி போன்று கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் அதேநேரம், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம். தடை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன்களை பயன்படுத்தினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலிஸாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி.. ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சென்னை போலிஸ்!