Tamilnadu

மழை குறித்து பொய் செய்தி போடும் ‘தினமலர்’ பத்திரிகைக்கு ‘குட்டு’ வைத்த ஆயிரம் விளக்கு தொகுதி MLA !

வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தொடங்கி சென்னையில் நேற்றைய முன்தினம் இரவு பெய்த மழை நேற்று முழுவதும் ஓயாமல் பெய்து வந்தது. முன்னதாக பருவமழை எச்சரிக்கை நடவடிக்கையாக பலவற்றை தமிழக அரசு மேற்கொண்டது.

அதில் சாலைகளில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளின் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்கிறது.

பொதுவாக சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் எப்போது மழை பெய்தாலும் சென்னை மக்களுக்குப் பிரச்னையாகவே இருந்தது.

குறிப்பாகச் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அதிமுக செய்து வைத்த அரைகுறை வேலை காரணமாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரிவர செய்யாத காரணத்தினாலும் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டதால் தான் மழை நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டும் சென்னையில் பருவமழையின் போது வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இனி வரும் மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு இதற்கென்று தனி குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி சென்னை முழுவதும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் கண்டறியும் பணிகளும் நடைபெற்றது.

பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வடிகால் வாய்களும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தூர்வாரப்பட்டது. அதேபோல் அனைத்து தெருக்களிலிருந்த கால்வாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.

இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் என பலரும் நேரடியாகச் சென்று அடிக்கடி ஆய்வு செய்து வந்தனர். இப்படி முதலமைச்சரின் மேற்பார்வையில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் விரைந்து நடைபெற்றதால் சென்னையில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது.

மேலும் சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் தேங்குகிறதா என்பதை கண்காணிக்க, பல்வேறு சுரங்கப்பாதைகளில் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிகிறதோ அங்கெல்லாம் மோட்டார் மூலம் அதிகாலையிலேயே தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக அரசின் இந்த மழைநீர் வடிகால் பணிகளின் துரித நடவடிக்கையை மக்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையான 'தினமலர்' தனது சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் விதமாக தவறான தகவல்களை பரப்பி வருகிறது.

திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தினமலர் ஊடகம், தற்போது மீண்டும் ஒரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் இல்லத்தின் முன் கனமழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகவும், அதனை நீக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவும் மருத்துவருமான எழிலன் நாகநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது முன்பு எப்போதோ நடந்த வெள்ளநீர் புகைப்படத்தை தற்போது நடந்தது போல் காட்டியிருக்கும் தினமலர் பத்திரிகையின் செய்தியை வெளியிட்டு, தற்போதுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு 'நாங்களும் தினமலரும்' என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பொய்யான செய்தியை பரப்பி வரும் தினமலர் ஊடகத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக "தினமலர்" நாளிதழில் போலி செய்தி வெளியிட்டது. இதற்கு ஆவின் நிர்வாகமும் பலத்த கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மழைநீர் தேங்காமல் கவனமாக பார்த்துகொண்ட விடியல் அரசு” : ஆதாரத்துடன் விளக்கிய மயிலை திமுக எம்.எல்.ஏ!