Tamilnadu

“‘நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலம் இதுவரை 1.20 லட்சம் பேர் பயன்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

‘நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.107 கோடி செலவில் 1.20 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள், இருதய உட்புகுத்து ஆய்வகம், கண் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் கண் தான வங்கி ஆகியவற்றை திறந்து வைத்து உலக விபத்து மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி கையேட்டினை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், உலக விபத்து விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 400 பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள். உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 50 இலட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,03,116 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நிகழாமல் இருக்க சாலை விதிமுறைகளை பின்பற்றவும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது பற்றியும், விபத்து நிகழ்ந்தால் முதலுதவி செய்வது பற்றியும், 'Golden Hour' - அதாவது விபத்துக்குள்ளானவர்களை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மேல்மருவத்தூரில் 18.12.2021 அன்று, இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 என்ற மகத்தான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த மகதத்துவமான திட்டத்தில் 228 அரசு மருத்துவமனைகள், 445 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 673 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் நேற்று (அக்.17) வரை 1,20,918 பயனாளிகளுக்கு ரூ.107,79,45,470 அரசு செலவு செய்துள்ளது. அதோடு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 2021 முதல் 20.09.2022 வரை 1832 விபத்து நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் ரூ.1.51 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Also Read: "என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..